கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 5–ந் தேதி தொடங்கியது. அன்று முதல் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை வருகிற 30–ந் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
நேற்று திருவனந்தபுரத்தில் கனமழை பெய்தது. இதனால் கரமனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையின் மீது ஓடியது. திருவனந்தபுரம் தம்பானூர் பழவங்காடி கணபதி கோவிலில் வெள்ளம் புகுந்தது. மேலும் தம்பானூர் உள்பட திருவனந்தபுரம் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தம்பானூர் ரெயில் நிலையத்திலும் வெள்ளம் புகுந்தது. இதனால் ரெயில் பயணிகள் தவிப்புக்கு ஆளானார்கள்.
தொடர் மழையால் திருவனந்தபுரம் நகரில் பனிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் தாக்கியோர் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
கேரளாவில் வடக்கு மாவட்டங்களான வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை நீடிக்கிறது. இதனால் வடக்கு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கண்ணூர் அருகே வஞ்சேரி என்ற மலைப்பிரதேசத்தில் காட்டு வெள்ளத்தில் சிக்கி ஒரு யானைக்குட்டி அடித்து வரப்பட்டது. வனத்துறையினர் அங்கு சென்று யானை குட்டியை மீட்டு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொச்சி எம்.சி.ரோடு மூவாற்றுப்புழா பகுதியில் மண் சரிவு காரணமாக 3 மாடி வீடு இடிந்து விழுந்தது.
0 comments