நடிகை ஷில்பா ஷெட்டி இந்தி திரை உலகில் கொடி கட்டி பறந்தார். சினிமாவில் இருந்து விலகியதும் தொழில் அதிபர் ராஜ்குந்தராவை மணந்தார். இருவரும் ஐ.பி.எல். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களாக உள்ளனர்.
ஷில்பா ஷெட்டிக்கு 3 வயதில் வியான் என்ற மகன் இருக்கிறான். தற்போது அவருக்கு 40 வயதாகிறது. ஆனாலும் அவர் இளமையுடன் காட்சி அளிக்கிறார். இதற்கு அவர் யோகா கலையை பின்பற்றுவதுதான் காரணம். தினமும் யோகா செய்கிறார்.
சர்வதேச யோகா தினத்தன்று ஷில்பா ஷெட்டி பெங்களூர் ஸ்டேடியத்தில் முதல்–மந்திரி சித்தராமையாவுடன் சேர்ந்த யோகா பயிற்சியில் ஈடுபட்டார். யோகா கலை பற்றி ஷில்பா ஷெட்டி கூறியதாவது:–
யோகா தான் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. என் வாழ்வில் நான் எதையும் திட்டமிட்டது கிடையாது. எல்லாம் தானாக நடக்கிறது. யோகா பயிற்சியில் பல மட்டங்களை கடந்து வந்து இருக்கிறேன். அது மிகவும் தெய்வீகமானது.
நீங்களும் யோகா கற்றால் உங்கள் வாழ்க்கை சூழ்நிலை மாறி விடும். எனவே யோகா கலையானது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தெய்வீகமானது என்பதை உணர்வீர்கள். தற்போது உடல் ஆரோக்கியம், சத்துணவு தொடர்பாக புத்தகம் எழுதி வருகிறேன். ஏற்கனவே உடற்பயிற்சி தொடர்பான டி.வி.டி.க்கள் தயாரித்து வெளியிட்டு இருக்கிறேன்.
நல்ல உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானது. அதற்கு சத்தான உணவு அவசியம். அதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறேன். சரியான உணவு கட்டுப்பாடு இல்லாமல் நீங்கள் செயல்பட்டால் அது உங்கள் வாழ்க்கையை பயனற்றதாக்கி விடும்.
சரியான நேரத்தில் உணவு சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இப்போது நம் மக்கள் இந்திய உணவு வகைகளில் இருக்கும் சத்துக்களை மறந்து விட்டார்கள்.
இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறினார்.
0 comments