வட்டுக்கோட்டை தொகுதிக்கான இலங்கை தமிழரசு கட்சியின் கிளை அலுவலகம் அத்தியடிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகையில் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி , சுமந்திரன் ஆகியோர் நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
கட்சி அலுவலகத்துடன் உதயவாழ்வு செயற்திட்டத்தின் அலுவலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது. உதயவாழ்வு செயற்திட்டத்தின் ஊடாக தையல் பயிற்சி நெறி, உடற் பயிற்சி மற்றும் கணணி வகுப்புகளும் நடாத்தப்பட உள்ளன.
மாதர் சங்கங்கள் ஊடாக ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்ட 40 பேருக்கு தையல் பயிற்சியை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகளும் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் இன்றைய நிகழ்வில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில் தையல் இயந்திரங்களும், நடக்க முடியாதவர்களுக்கான ஊன்றுகோல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, உதவித்திட்டங்கள் தேவைப்படுவோருக்கு தாம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கவுள்ளதாக உதயவாழ்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் யாழ்.கிளிநொச்சி மாட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
மேலும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், விநாயகமூர்த்தி, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், ஆனோல்ட், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் , வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் ,வலி மேற்கு தவிசாளர் திருமதி ஜங்கரன் மதகுருமார்கள் மற்றும் பொது மக்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments